கினிகத்ஹேன - கடவல பகுதியில் உள்ள பாடசாலையில் பயிலும் மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கிய பேருந்தின் நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
பருவச்சீட்டுடன் சென்ற குறித்த மாணவர்களை பேருந்து நடத்துநர் பேருந்திலிருந்து இறக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
இந்த நிலையில் இது தொடர்பில் பாராளுமன்றில் கருத்துரைத்த போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்னாயக்க,
குறித்த பேருந்து நடத்துநருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவித்தார். அத்துடன் அவரை பணியிடை நீக்கம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்படி, அவருக்கு எதிராக விசாரணைகள் நிறைவடையும் வரையில் அவரை மீண்டும் பணியில் இணைத்து கொள்ளாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.