வாடகை வாகனத்தில் பயணிக்கும் போர்வையில் கார் ஒன்றில் வாடகைக்கு ஏறி சாரதியை கத்தி முனையில் மிரட்டி காரை கொள்ளையிட்டுச் சென்றதாக கூறப்படும் பெண் உட்பட மூவர் தம்பதெனிய பிரதேசத்தில் வைத்து கடந்த சனிக்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.
தம்பதெனிய, உஸ்வெட்டகெய்யாவ ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 21 மற்றும் 24 வயதுடைய இரு இளைஞர்களும் ஆடிகம பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடைய பெண்ணொருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் மூவரும் கடந்த 10 ஆம் திகதி புத்தளம் - பல்லம பிரதேசத்தில் வைத்து கார் ஒன்றில் வாடகைக்கு ஏறி சாரதியை கத்தி முனையில் மிரட்டி காரை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர், மீகொடை பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்றை திருடுதல் மற்றும் பன்னல பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்தவர்களை கத்தி முனையில் மிரட்டி 16 இலட்சத்து 86 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிடுதல் உள்ளிட்ட குற்றங்களுடன் தொடர்புடையவர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொள்ளையிடப்பட்ட கார் சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.