மாத்தளை மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு அமைய, நாடு திரும்பிய இலங்கை கிரிக்கெட் அணி தெரிவுக்குழுவின் தலைவர் கிரிக்கெட் வீரர் உபுல் தரங்கவை கைது செய்ய தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (16) உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாத்தளை மேல் நீதிமன்றத்தின் உத்தரவின் சட்டபூர்வமான தன்மையை சவால் செய்து உபுல் தரங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவையடுத்து மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான எம்.டி.எம்.லஃபர் மற்றும் பி.குமாரரத்தினம் ஆகிய இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேட்ச் பிக்சிங் வழக்கின் சாட்சியாக அவர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதையடுத்து கடந்த ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதி, உபுல் தரங்கவை கைது செய்யுமாறு மாத்தளை உயர்நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.
தரங்க அமெரிக்காவில் இருக்கும் போதே அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு அவர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க உள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் உபுல் தரங்க சார்பில் கமிந்து கருணாசேனவின் அறிவுறுத்தலின் பேரில் சிரேஷ்ட சட்டத்தரணி நிஷான் சிட்னி பிரேமதிரத்ன, ஷெனாலி டயஸ் மற்றும் விக்கும் ஜயசிங்க ஆகியோர் முன்னிலையாகினர்.