ஐ.நா பொதுச் சபையின் 78ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதியின் விசேட உரை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஐ.நா பொதுச் சபையின் 78ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதியின் விசேட உரை!

தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு சமாதானத்துடன், நல்லிணக்கத்தின் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்து, நாட்டின் அனைத்து பிரிவினருக்கும் பயனளிக்கும் நிலைபேறான வளர்ச்சியை நோக்கி நாட்டை இட்டுச் செல்வதே தமது நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச தலைவர்கள் முன்னிலையில் வலியுறுத்தியுள்ளார்.


நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 78ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.



அந்த இலக்கை அடைவதற்கு இலங்கை மக்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையும், ஆதரவும் தமக்கு கிடைக்கும் என தாம் நம்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.



“நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்புதல் மற்றும் ஒற்றுமையை நிலைநாட்டுதல்” என்பது இன்றைய பலதரப்புக்கு முன்னால் உள்ள சவால்களைப் பற்றிச் சிந்தித்துப் பார்ப்பதற்கு மட்டுமல்ல, கடந்த வருடத்தில் எமது நாடான இலங்கையில் ஏற்பட்ட விடயங்களை மறுபரிசீலனை செய்வதற்கும் சரியான பிரவேசம் ஆகும்.



கடந்த ஆண்டு இந்த நேரத்தில், பல உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில், இலங்கை சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக அண்மைக் காலங்களில் மிகவும் சவாலான காலகட்டத்தை அனுபவித்து வந்தது,


இது மக்களின் வாழ்க்கையில் பேரழிவுகரமான தாக்கத்தை ஏற்படுத்தியது.


நமது நாடாளுமன்றத்தை ஆக்கிரமிக்கும் முயற்சிகளால் நமது ஜனநாயக மரபுகள் கூட அச்சுறுத்தலுக்கு உள்ளாகின.


இருந்தபோதிலும், ஆழமாக வேரூன்றிய மற்றும் உறுதியான ஜனநாயக மரபுகள் காரணமாக, ஜனநாயக அரசியல் அதிகார மாற்றத்தை ஏற்படுத்துவதில் நாங்கள் வெற்றி பெற்றோம்.



ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய உர நன்கொடை பொருளாதாரம் மீட்சிக்கும், ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும் எமக்கு உதவியது.


பொருளாதாரம், நிதி, நிறுவன மற்றும் நல்லிணக்கம் ஆகிய துறைகளில் நான் தொடங்கிய சீர்திருத்தங்கள் ஒருபுறம் மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டமைந்தது.


மறுபுறம், பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் மீட்சிக்கான அடித்தளத்தை உருவாக்குவதாக அமைகின்றது.


இலங்கையர்களுக்கு தங்கள் அன்றாட வாழ்வில் இந்த நடவடிக்கைகள் சாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தியுள்ளதோடு, நாட்டின் முன்னேற்றம்குறித்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நம்பிக்கையின் மறுமலர்ச்சியையும் உருவாக்கியுள்ளது.


பிளவுபட்ட அரசியல் புவிசார் கருத்தியலொன்றை காண்கிறோம். புதிய பூகோள அதிகார மையமொன்று தோன்றி வருவதையும் நாம் காண்கிறோம்.


இந்த மாற்றத்துடன், ஒருபுறம் மக்கள் வறுமையிலிருந்து சுபீட்சத்தை நோக்கிச் செல்வதோடு அதன்படி அபிவிருத்தி மற்றும் மானிட முன்னேற்றம்குறித்த பெரும் எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளன.


மறுபுறம், தரைமார்க்கமாகவும் சமுத்திர ரீதியாகவும் தோன்றியுள்ள பாரிய சக்திகளின் போட்டிகளும் புவிசார் அரசியல் பதட்டங்களும் வெளிப்படையான போர் சூழலை உருவாக்கியுள்ளது


ஆரம்ப காலங்களை விடவும் தற்போது உலகில் உள்ள பாதுகாப்புக் கூட்டணிகள் தற்போது விரிவடைந்துள்ளதுடன், அவற்றுக்கு முகம்கொடுக்க பழைய மற்றும் புதிய சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப மூலோபாயங்கள் உருவாகிவருகின்றன.


2030 இன் வாக்குறுதிக்கு மாறாக, பல தசாப்தங்களாக காணப்படாத வறுமை மற்றும் பசியின் நிலைமைகளை இன்று நாம் காண்கிறோம்.


இலங்கை போன்ற உலகளாவிய தெற்கின் நடுநிலையான, அணிசேரா நாடுகள், புதிய உலகளாவிய செல்வந்த நாடுகளின் முன்னிலையில் மீண்டும் வரையறைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.


இந்த ஆண்டு பொதுச் சபை விவாதத்தின் கருப்பொருளான “நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் உலகளாவிய ஒற்றுமையை மீண்டும் உருவாக்குதல்” தற்போதைய உலகளாவிய நெருக்கடிகளுக்கான எடுத்துக்காட்டாகும்.


இந்த ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தொடருக்கு இணையாக நடைபெற்ற, நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை விரைவுபடுத்துதல், அபிவிருத்திக்கான நிதியியல் மற்றும் காலநிலை மாநாடு உள்ளிட்ட 3 மாநாடுகளில் இலங்கை பங்கேற்றுள்ளது.


அங்கு இதற்கு இணையாக செயற்பட சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் கூட்டு நடவடிக்கை தேவை என்பதை நாங்கள் ஒப்புக்கொண்டோம்.


எல்லை தாண்டிய நிதி அழுத்தங்கள், காலநிலை மாற்றம் மற்றும் தொற்றுநோய் போன்ற எமது நெருக்கடிகள்மூலம், இலங்கையை போன்ற சிறிய கடன்நெருக்கடிக்கு ஆளாகியுள்ள நாடுகளின் திறனை நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் மற்றும் காலநிலை தழுவல் மற்றும் தணிப்பு ஆகியவற்றில் முன்னேற்றம் அடைய தடையாக உள்ளது.


பூகோளத்தின் மீதான தமது பொறுப்பை இலங்கை தட்டிக்கழிக்கவில்லை.



2030 ஆம் ஆண்டுக்குள் மின்சார உற்பத்தியில் 70 சதவீதம் புதுப்பிக்கத் தக்க வலுசக்தியடாகப் பெறுவோம், வனப் பரப்பை 32 சதவீதமாக அதிகரிப்போம்,


அத்துடன், பசுமை வாயு வெளியேற்றத்தை 14.5 சதவீதமாக குறைப்போம் என்று கூறினோம்.


2040 இல் நிலக்கரிப் பயன்பாட்டைப் படிப்படியாகக் குறைத்து, 2050 இல் கரியமில வாயு நிகர பூஜ்ஜியத்தை அடைய எதிர்பார்த்துள்ளோம்.


எங்களின் குறைந்த கரியமில வாயு வளர்ச்சிப் பாதை, குறைந்த நடுத்தர வருமான நாடுகள், நாட்டிற்கான தனிநபர் கரியமில வாயு உமிழ்வு விகிதங்களில் மிகக்குறைந்த ஒன்றாகும்.


இந்த வருடம், முகம்கொடுக்க வேண்டி ஏற்பட்ட பொருளாதார சவால்கள் மற்றும் கடன்களின் விளைவாக, ஒரு நாடு என்ற வகையில் நாம் அடைய எதிர்பார்த்த அபிவிருத்தி வளர்ச்சி வேகத்தை எம்மால் அடைய முடியவில்லை.


உணவுப் பற்றாக்குறை, பாதிக்கப்படக்கூடிய சமூகங்கள் மத்தியில் உணவுப் பாதுகாப்பில் குறிப்பிடத் தக்க அழுத்தத்தை ஏற்படுத்தி வருகின்றது.


அதே நேரத்தில் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக குழந்தைகளின் கல்வி மற்றும் போசாக்கு நிலைமை பாதிக்கப்பட்டுள்ளது.


சீரற்ற காலநிலையின் விளைவாக, சுத்தமான வலுசக்தி, உணவுப் பாதுகாப்பு, குடிநீரைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் நமது விவசாயிகளின் வாழ்வாதாரம் ஆகியவற்றுக்கான நமது உறுதிப்பாட்டில் பாதகமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன.


கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியில் இருந்து நாம் மீள ஆரம்பிக்கும்போது, இந்த நிலைமை எமது நிதி தேவைகளை அதிகரித்துள்ளது.


காலநிலையால் பாதிக்கப்படக்கூடிய அபிவிருத்தி அடைந்து வரும் நாடு என்ற வகையிலும், கடன் நெருக்கடியில் இருப்பதாலும், காலநிலை நிதியைத் திரட்டுவதற்கான அவசரம் முன்பை விட இன்று அதிகமாக உள்ளது.


காலநிலை நிதியியலை செல்வந்த நாடுகள் வாக்குறுதிகளை வழங்கியிருந்த போதிலும் அதனை தற்போதுவரையில் பூர்த்தி செய்யப்படவில்லை.


பொதுவான பங்களிப்பாக கருதக் கூடிய மற்றும் இழப்பீடு வழங்குதல் போன்றவற்றுக்கு அபிவிருத்தி அடைந்த நாடுகள் அவர்களின் பங்களிப்புகளை வழங்கி அவர்கள் ஒப்புக்கொண்டதை நிறைவேற்ற வேண்டும்.


நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளின் வெற்றியை உறுதி செய்வதற்கும், காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை மாற்றியமைப்பதற்கும் தேசிய முயற்சிகள் மாத்திரம் போதாது.


சர்வதேச நிதிக் கட்டமைப்பை மீள்கட்டமைக்க உலகளாவிய ஒற்றுமையின் தேவை மிக முக்கியமானது.


பூமியை பாதுகாப்பதே எமது முன்னுரிமையாக இருக்க வேண்டும், பிளவுகளுடன் போருக்கு நாம் செல்ல முடியாது.


இந்த நெருக்கடிகளை நிறைவு செய்துகொள்ளும் வரை ஒவ்வொருவருக்கும் இடையில் நிலவுகின்ற போட்டிகளை ஒதுக்கி வைக்கும் இயலுமையிலேயே உலகின் அனைத்து உயிரினங்களின் எதிர்காலமும் தங்கியுள்ளது.


சர்வதேச உறவுகளில் ஊடுருவியுள்ள அவநம்பிக்கை, அதிகரித்துள்ள போதிலும் உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான புதிய வழிகளைக் கண்டறிய வேண்டும்.


அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுடன் ஒற்றுமையுடன் இணைந்து பணியாற்றுவதற்கான நிரந்தர உறுப்பினர்களின் விருப்பத்தின் மூலம் இதை எட்ட முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸவுக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.