விமான டிக்கெட் இல்லாமல், 7 அடுக்கு பாதுகாப்பையும் மீறி சென்னை விமான நிலையத்துக்குள் சென்ற நபரை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுதந்திர தினத்தையொட்டி, சென்னை விமான நிலையத்தில் உச்சகட்டமாக 7 அடுக்குபாதுகாப்பு முறை அமலில் உள்ளது. திங்கட்கிழமை (14) இரவு இளைஞர் ஒருவர் விமான டிக்கெட், சிறப்பு அனுமதி பாஸ் எதுவும் இல்லாமல், விமான நிலையத்தின் பாதுகாப்பு சோதனை, சுங்கச் சோதனை ஆகிய பகுதிகளைக் கடந்து, குடியுரிமை சோதனை நடக்கும் கவுன்ட்டர் பகுதி வரை சென்று அங்கு சுற்றிக் கொண்டிருந்தார்.
இரவு 10 மணி அளவில் குடியுரிமை அலுவலக கவுன்ட்டர் பகுதியில் ஊழியர் ஒருவரின் செல்போனை திருட முயன்றுள்ளார். இதையடுத்து, அந்த இளைஞரைப் பிடித்து அடித்த அதிகாரிகள், விமான நிலையமேலாளர் அறையில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அவர் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தினேஷ் ஞானசூரியன் (35) என்பதும், 3 மாத விசாவில் இலங்கையிலிருந்து சென்னை வந்திருப்பதும் தெரியவந்தது.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. 7 அடுக்கு பாதுகாப்பையும் மீறி ஒருவர் எந்த ஆவணமும் இல்லாமல் விமான நிலையத்துக்குள் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ஏழாவது வாயிலில் பணியில் இருந்த நான்கு சிஐஎஸ்எஃப் பணியாளர்கள் பணியில் அலட்சியமாக இருந்ததற்காக பணிநீக்கம் செய்யப்படலாம் என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. (யாழ் நியூஸ்)