
ஈஸ்டர் ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவிக்கு எதிராக வழக்கு விசாரணையின்போது பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் தொடர்பில் ஆட்சேபனைகள் பொலிஸாரினால் எழுப்பப்பட்ட நிலையில் எழுத்து மூல சமர்ப்பணத்துக்காக எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்த வழக்கு கல்முனை மேல் நீதிமன்ற நீதிவான் ஜயராம் ட்ரொக்ஸி முன்னிலையில் விசாரணைக்கு இன்று (30) வந்தபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன்படி வழக்கானது இன்று விசாரணைக்காக எடுக்கப்பட்ட வேளை பிரதிவாதி ஸஹ்ரானின் மனைவி சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி ருஸ்தி ஹபீப், முஹமட் அக்ரம் உட்பட சலாகுதீன் சப்றீன் மூவரும் ஆஜராகினர்.
இன்றைய விசாரணையின்போது நீதிமன்றில் பொலிஸாரிடம் ஸஹ்ரானின் மனைவியினால் ஏற்கனவே வழங்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் தொடர்பில் ஆட்சேபனை எழுப்பப்பட்டிருந்தது.
மேலும் ஸஹ்ரான் மற்றும் தப்பிச் சென்றதாக கூறப்புடும் புலஸ்தினி போன்றவர்களின் தொடர்களை மறைத்தமை குறித்து ஸஹ்ரானின் மனைவிக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதுடன் குற்றப்புலனாய்வு பிரிவானது ஸஹ்ரானின் மனைவியிடம் 4 வாக்குமூலங்களை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.
-பாறுக் ஷிஹான்