
க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) வெளியாகியுள்ள நிலையில், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 05 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரையான 3 வாரங்களுக்கு ஒன்லைன் மூலம் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க முடியுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பது குறித்து மாணவர்களுக்கு உரியவாறான தெளிவுபடுத்தலை வழங்கும் நோக்கில் இன்று (30) கொழும்பில் அரசாங்கத்தகவல் திணைக்களத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இவ்வாறு தெரிவித்தார்.
கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) வெளியாகியிருக்கும் நிலையில், மாணவர்கள் அடுத்த திங்கட்கிழமை முதல் இணையவழியில் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கமுடியும். அதன்படி மாணவர்கள் www.ugc.ac.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி வரையான 3 வாரங்களுக்குப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அவர் கூறினார்.