கொட்டதெனியாவ - வத்தேமுல்லை பகுதியில் அல்-கய்தா என்ற பெயரில் மக்களை அச்சுறுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த குழுவின் மற்றுமொரு உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மினுவாங்கொடை பகுதியில் வைத்து நேற்று (22) மாலை கைதானார்.
வத்தேமுல்லை பகுதியை சேர்ந்த 19 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பிரதேசத்தில் அல்கொய்தா குடும்பம் என அடையாளம் காணப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த நபரே கொட்டதெனியாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் உள்ள இரண்டு இளம் பெண்களை சந்தேகநபர் தாக்குவதை தடுக்க முயன்ற தம்பதியினரை அவர் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர் இரண்டு சிறுமிகளின் குடும்பத்தின் மூத்த மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இரண்டு நாள் விசாரணையின் பின்னர் குறித்த சந்தேகநபரின் தாயாரிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரின் கையடக்கத் தொலைபேசியில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் பல்வேறு சிறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு தேடப்பட்டு வந்த ஏனைய சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த குடும்பத்தாரால் தாம் தொடர்ந்து துன்புறுத்தப்படுவதாகவும், அவர்களை கிராமத்திலிருந்து அகற்றுமாறும் பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு அறிவித்துள்ள அதேவேளை, பிரதான சந்தேக நபருடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களையும் கைது செய்யுமாறு கோரியிருந்தனர்.
சந்தேக நபரால் தாக்கப்பட்ட தம்பதியினர் ஆபத்தான நிலையில் தற்போது வத்துப்பிட்டிவல மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)