இலங்கை சுங்கத் திணைக்களத்தில் உள்ள தரவுகளின் அடிப்படையில் மூன்று மாதங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது அமைச்சர் ராஜபக்ஷ இதனை தெரிவித்தார்.
அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் தட்டுப்பாடு இன்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பல்வேறு பகுதிகளுக்கு பொருட்களை விநியோகிப்பது தொடர்பான தரவுகள் தங்களிடம் இல்லை என்றும், சுங்கம் மற்றும் மொத்த விற்பனையாளர்களின் விவரங்களின்படி, தற்போது சந்தையில் மூன்று மாதங்களுக்கு போதுமான பொருட்கள் இருப்பதை உறுதி செய்ய முடியும் என்றும் நிதி அமைச்சர் கூறினார்.
ஒரு குறிப்பிட்ட பகுதியில் கிடைக்கும் சில பொருட்கள் பல்வேறு காரணங்களால் மற்றவர்களுக்கு கிடைக்காமல் போகலாம் என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.
மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக பிராந்திய தகவல்களை பெற்றுக்கொள்ளும் பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
விற்பனையாளர்கள் பொருட்களை விநியோகிக்கவில்லை அல்லது சில பொருட்களை விற்க நிபந்தனைகளை விதித்தால், அவர்கள் தண்டிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இத்தகைய நடவடிக்கைகள் தண்டனைக்குரிய குற்றமாகும் என்று நிதி அமைச்சர் கூறினார்