மக்களை ஒடுக்குவதற்கே அவசரகால சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
அவசரகால சட்டம் தொடர்பான வாக்களிப்புக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், இந்த அரசை ஆட்சிக்கு கொண்டுவர உதவிய அரசின் நண்பர்களாலேயே சீனி, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் தட்டுபாடு ஏற்பட்டு விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இவர்களே சீனியை இலங்கைக்கு கொண்டுவந்தனர். அரிசி விலையை தீர்மானிக்கின்றனர். இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் மக்களுக்கு நிவாரணம் வழங்கமுடியும். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படுவதெல்லாம் அப்பாவி சில்லறை வியாபாரிகள் மீது. அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த இந்த சட்டம் கொண்டுவரப்படவில்லை என இதில் இருந்தே தெளிவாகிறது எனவும் தெரிவித்தார்.
குற்றவாளிகளை அருகில் வைத்துக்கொண்டு பொதுமக்களை அடக்கவே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டிருக்கும் பஞ்சத்தால் பொதுமக்கள் அனைவரும் வீதிக்கு இறங்குவார்கள் என்ற பயத்தில் இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
-ஏ.எம். ஏ பரீட்