மஞ்சள் நிறத்திலான லாப் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு நீல நிற வர்ணம் பூசி, லிட்ரோ (நீல நிற) சமையல் எரிவாயு நிரப்பப்பட்ட சிலிண்டரை பெற்றுக்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
ஹட்டன்- டிக்கோயா நகரிலுள்ள லிட்ரோ சமையல் எரிவாயு (நீல நிறம்) முகவர் விற்பனை நிலையத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஓட்டோவொன்றில் இந்த மாதம் 27ஆம் திகதி, வருகைத் தந்த பெண்ணொருவர், லிட்ரோ சமையல் எரிவாயு வெற்று சிலிண்டரைக் கையளித்து விட்டு, அதற்குப் பதிலாக மற்றுமொரு சமையல் எரிவாய நிரப்பப்பட்ட சிலிண்டர் ஒன்றைக் கொள்வனவு செய்துள்ளார்.
இந்நிலையில், குறித்த முகவர் நிலையத்துக்கு சமையல் எரிவாயு விநியோகத்துக்காக வருகைத் தந்த லொறியில், வெற்று சமையல் சிலிண்டர்களை ஏற்றும் போது, மஞ்சள் நிறம் வெளியே தெரிந்துள்ளது.
இதனையடுத்து, குறித்த வர்த்தக நிலையத்திலுள்ள பாதுகாப்பு கமெராவை பரிசோதித்த விற்பனை நிலைய உரிமையாளர், பெண்ணொருவர் குறித்த சிலிண்டரை கொண்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில், குறித்த வர்த்தகர் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், அப்பெண்ணை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.