
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பதனை மக்கள் தீர்மானிப்பார்கள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் எண்ணக்கருவில் நடைபெற்று வரும் ஊருடன் கலந்துரையாடல் நிகழ்வு இன்றைய தினம் வலப்பனையில் நடைபெற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மக்கள் தமக்கு அறுபது மாதங்கள் ஆட்சி செய்வதற்கான அதிகாரத்தை வழங்கியுள்ளதாகவும், தற்பொழுது 14 மாதங்கள் மட்டுமே முடிந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்னும் பெருமளவு ஆட்சிக் காலம் தமக்கு எஞ்சியுள்ளது எனவும், அதில் எவ்வாறு ஆட்சி முன்னெடுக்கப்படுகின்றது என்பதனை பார்த்து மக்கள் தீர்மானங்களை எடுப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாம் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என சிலர் பதற்றமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பதனை மக்கள் தீர்மானிப்பார்கள் எனவும், கடந்த தடவையும் மக்களே இதனை தீர்மானித்தார்கள் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.