தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை இலங்கை அரசாங்கம் அரசுடமையாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
ராமேஸ்வரம் மீனவர்கள் தமது விசைப்படகுகளில் கறுப்புக் கொடி ஏற்றி குறித்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் குறித்த மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் காரைநகர் கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
$ads={2}
இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் நேற்றையதினம் சென்னை விமான நிலையம் சென்றடைந்தனர்.
ஆனால் மீனவர்களின் பல இலட்சம் ரூபாய் மதிப்பிலான நான்கு விசைப்படகுகளை இலங்கை அரசுடமை செய்வதாக ஊற்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இலங்கை அரசால் சிறை பிடிக்கப்பட்டு அரசுடமையாக்கப்பட்ட பல இலட்சம் ரூபாய் மதிப்பிலான விசைப்படகுகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் 1974 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட கச்சை தீவு ஒப்பந்தத்தின் படி கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் உரிமை உண்டு எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே அப்பகுதிகளில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்வதை கண்டித்தும் பாரம்பாரிய இடத்தில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் உரிமையை மீட்டுத்தர வலியுறுத்தியும் இன்று காலை முதல் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கபட்டடுள்ள விசைப்படகுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.