
சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் உய்கர் இன முஸ்லிம்களுக்கு எதிராக அந்த நாட்டு அரசாங்கம், இன அழிப்பில் ஈடுபடுவதாக அமெரிக்கா முன்வைத்துள்ள குற்றச்சாட்டினை சீனா மறுத்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பிலிருந்து வெளியேறுவதற்கு முன்னதாக இந்த அறிவிப்பை மைக்கேல் பொம்பேயோ வெளியிட்டார்.
$ads={2}
இந்தத் தகவல்கள் அனைத்தும் பொய்யான செய்திகள் என மறுத்துள்ள வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹூவா சன்யிங், இதற்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பொம்போயோ, தனது பதவிக் காலம் முழுவதும் சோடிக்கப்பட்ட, உணர்ச்சிமயமான பொய்களைக் கூறி வந்துள்ளார். தற்போது ஜின்ஜியாங் மாகாணத்தில் இன அழிப்பு நடைபெறுவதாக அவர் கூறுவதும் அத்தகைய தவறான தகவலே ஆகும்.
சீனாவில் இன அழிப்பு என்பது இதற்கு முன்னர் நடைபெற்றதில்லை, தற்போதும் நடைபெறவில்லை, இனியும் நடைபெறாது’ என கூறினார்.
உய்கர் பெண்களுக்கு கட்டாயமாக கருத்தடை செய்வது, அவர்களை கொத்தடிமைகளாக வைத்து வேலை வாங்குவது போன்ற நடவடிக்கைகள் குறித்து ஏற்கெனவே மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.