
கொழும்பு நகரில் இன்று (05) முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் மூலம் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணியாத நபர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கும் செயற்பாட்டுக்கு மேலதிகமாக, அவர்களை ராபிட் அன்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு நகரில் முகக்கவசம் அணியாத 300 பேருக்கு இன்று ராபிட் அன்டிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், அவர்களில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து குறித்த இருவரையும் சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், குறித்த நபர்களுக்கு எதிராக முகக்கவசம் அணியாமை தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, கொழும்பு நகரில் முகக்கவசம் அணியாதோருக்கு Rapid Antigen பரிசோதனைகளை மேற்கொள்ளும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.