
ஆசிரியர் பற்றாகுறைக்கு தீர்வாக பாடசாலைகளுக்கு நியமிக்கப்படும் விமானப்படை அதிகாரிகள் வவுனியா மற்றும் கெப்பிட்டிகொல்லாவ பிரதேசங்களில் உள்ள பின்தங்கிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாகுறைக்கு தீர்வாக விமானப்படை அதிகாரிகளை ஆசிரியர்களாக பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் இந்த பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பாடசாலை கற்பிக்க விமானப்படை அதிகாரிகளை பயன்படுத்த தயாராகி வருகின்றனர் எனவும் அந்த சங்கம் கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை முற்றாக எதிர்ப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
19 கல்வியற் கல்லூரிகளில் பயிற்சி பெற்ற பெருந்தொகையான ஆசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படுவது தாமதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கு உடனடியாக நியமனங்களை வழங்கி, அவர்களை பின்தங்கிய பாடசாலைகளுக்கு நியமிக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
பின்தங்கிய பாடசாலைகளுக்கு விமானப்படை அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என கிராமத்துடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போதே ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாகவும் ஜோசப் ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.