
அண்மையில் மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தில் 11 கைதிகள் உயிரிழந்திருந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக ஐந்து பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.
சிறைச்சாலையில் ஏற்பட்ட கலக நிலைமைக்கு நீண்ட கால சூழ்ச்சித் திட்டங்கள் காரணமல்ல எனவும், திடீரென ஏற்பட்ட மரண பீதியே இந்த சம்பவத்திற்கான காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறைச்சாலையில் 806 கைதிகளையே தடுத்து வைக்க முடியும் என்ற போதிலும் சம்பவ தினமன்று 2,600க்கும் மேற்பட்ட கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருத்தமில்லாத உணவு வழங்கியமை, PCR பரிசோதனை நடத்தாமை, பிணை வழங்கப்பட்டவர்கள் விடுவிக்காமை, கொரொனா தொற்றாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமை உள்ளிட்ட சில காரணிகளே இந்த கலவரம் ஏற்படக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில சந்தர்ப்பங்களில் கறிகளில் அதிகளவு நீர் கலந்து கைதிகளுக்கு உணவு வழங்கப்பட்டதாக கைதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சுவையான உணவுகளை சிறைச்சாலை நிர்வாகம் வழங்குவதில்லை என கைதிகள் கடுமையான அதிருப்தியுடன் இருந்தனர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மஹர சிறைச்சாலையில் கைதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என சம்பவம் இடம்பெற்ற தினத்தில் மதிய நேர செய்தி அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டதனைத் தொடர்ந்து கைதிகள் குழப்பமடைந்து கலகத்தில் ஈடுபட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹர சிறைச்சாலை கலவரம் தொடர்பில் விசாரணை நடாத்துவதற்கு நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழுவின் இறுதி விசாரணை அறிக்கை நேற்றைய தினம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.