யாழில் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட நிலையில் சிசுவொன்றின் சடலம் மீட்பு
யாழ். அரியாலை, புங்கன்குளம் பகுதியில் பிறந்த சிசுவொன்று மண்ணுக்குள் புதைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது வீட்டு வளாகத்திலிருந்து சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
24 வயதுடைய திருமணமாகாத பெண் ஒருவர் குருதிப்போக்கு காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு குழந்தை பிறந்துள்ளமை தொடர்பில் சட்ட மருத்துவ அதிகாரிக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து யாழ். போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி மற்றும் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி மற்றும் பொலிஸார் ஆகியோர் குறித்த பெண்ணின் வீட்டிற்கு இன்றைய தினம் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது வீட்டு வாசலில் புதைக்கப்பட்ட நிலையில் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உயிரிழந்த சிசுவின் மரணம் இயற்கையாகவே நேர்ந்ததா அல்லது கொலையா என்பது தொடர்பில் சட்ட மருத்துவ பரிசோதனையின் பின்னர் தெரியவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.