ஏனெனில் எங்களது செயற்பாடுகள் அனைத்தும் நேர்மையானதும் நீதியானதும், சுகாதாரம் சார்ந்தவையாகவுமே காணப்படுகின்றன என கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஜி. சுகுணன் தெரிவித்தார்.
கல்முனையில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக சிபாரிசு செய்யப்பட்டதன் நோக்கம் தொடர்பில் விபரிப்பதற்காக இன்று (31) நடைபெற்ற உயர் மட்டக் கூட்டத்தின் பின்னரான ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
இன்று உலகம் முழுவதும் வியாபித்துள்ள கொரோனா தொற்று நோயின் அபாயத்தை உணர்ந்தவர்களாக அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என்பதோடு பேஸ்புக்கில் முகம் தெரியாமல் எழுதுபவர்களை நான் வினயமாக கேட்டுக் கொள்வது என்னவென்றால் சகல விடயங்களையும் ஆராய்ந்தறிந்து அதனோடு சம்மந்தப்பட்டவர்களோடு கலந்துரையாடிவிட்டு எழுதுங்கள்.
அவ்வாறின்றி நீங்கள் எழுதும் எழுத்துக்கள் உங்களை நீங்களே ஒரு இனவாதியாக காட்டிக் கொள்கிறீர்கள் என்பதோடு நீங்கள் இந்த சமூகத்துக்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பதற்கு தயராவதையும் உங்களது விமர்சனங்கள் வெளிக்காட்டுகின்றன.
நீங்கள் மற்றவர்கள்மீது சாட்டும் எல்லா குற்றங்களும் உங்களையே வந்து சேரும். எனவே விடயங்களை அறிந்து கருத்துக்களை பதிவேற்றம் செய்யுங்கள். என குறிப்பிட்டார்.
கல்முனை பிராந்தியத்தில் இன்றுவரை 800க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்கள். ஏற்கனவே அக்கரைப்பற்று பிரதேசத்தில் தொற்று நிலை அளவுக்கு அதிகமாக அதிகரித்ததை தொடர்ந்து அங்கு தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அந்த பிரதேசம் தற்போது தொற்று நிலைமையில் இருந்து நீங்கி வரும் நிலையில் கல்முனை நகர பிரதேசத்தில் 150க்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இது ஒரு உப கொத்தனியை தோற்றுவிக்கும் என்ற ஆதங்கத்தில் குறித்த பிரதேசத்தில் ஒரு பகுதியை அதாவது கல்முனை செய்லான் வீதியில் இருந்து வாடி வீட்டு வீதி வரை தனிமைப்படுத்துவதற்கு ஜனாதிபதியின் கொரோனா ஒழிப்பு செயலணிக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். அதன் முடிவு வரும்வரை குறித்த பிரதேசத்தில் போக்குவரத்துக்களை முடக்கி சன நடமாட்டத்தை குறைப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இது தொடர்பில் மக்களின் ஒத்துழைப்புக்களைப் பெறல், எதிர்கால நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் இன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் ஒரு உயர்மட்ட கூட்டம் இடம்பெற்றது.
மேற்படி கூட்டத்தில் குறித்த பிரதேசம் மாத்திரம் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக சிபாரிசு செய்ததன் காரணம் என்ன? அத்துடன் எதிர்காலத்தில் செய்யப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் பல முடிவுகள் எடுக்கப்பட்டன.
குறித்த பிரதேசத்தை தெரிவு செய்ததற்கான முக்கிய நோக்கம் கொரோனா தொற்றை கல்முனை பிரதேசத்திலிருந்து ஒழித்துவிட வேண்டும் என்பதற்காக செறிவு கூடிய பகுதிகளை மாத்திரம் தனிமைப்படுத்தியுள்ளோம். அத்துடன் சந்தை வலயம் என்பது இங்கு மட்டும் அல்ல பேலியகொடை, யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று போன்ற பல பகுதிகளில் கூட சந்தை வலயத்தில் இருந்து தொற்றாளர்கள் கூடுதலாக இணங்காணப்பட்டுள்ளார்கள்.
அதேபோன்று தான் கல்முனை சந்தை தொகுதியும் கொரோனா தொற்று பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்ற உண்மையான நிலைமையை சம்பந்தப்பட்டவர்களுக்கு தெளிவாக எடுத்துரைத்துள்ளோம். அந்த வகையில் கல்முனை சந்தை வரையிலான பிராந்தியங்கள் தனிமைப்படுத்தலுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், இக் கூட்டத்தில் எந்தச் சவால்கள் வந்தாலும் மக்களின் நலனுக்காக நேர்மையான, நீதியான சரியான முடிவை எடுப்பதென தீர்மானிக்கப்பட்டது.
எதிர்வரும் காலங்களில் எந்தவொரு முடிவை எடுப்பதாயினும் அனைவருடனும் கலந்துரையாடி முடிவை எடுப்பதாகவும் வர்த்தக நடவடிக்கைகள் சம்பந்தமான விடயங்களை அடுத்த வாரத்தில் மீண்டும் கூடி ஆராய்வது தொடர்பில் முடிவெடுக்கப்பட்டது.
மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் உள்ள நோயாளிகளின் மருத்துவ விடயங்கள், உணவு மற்றும் அடிப்படை தேவைகளின் விஸ்தரிப்பு மற்றும் அலுவலகங்களின் நடவடிக்கைகள் போன்ற பல விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
எனவே மிக விரைவில் இந்த நோயின் தாக்கத்தை கல்முனை நகர் பகுதியிலிருந்து ஒழித்து விட முடியும் என நம்புகிறேன். இதற்கு மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அமைப்புகள், சங்கங்கள் என ஒன்றாக ஒத்துழைப்புக்கள் வழங்க வேண்டும் என குறிப்பிட்டார்.
-பாறூக் சிஹான்