
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் பிரதான வீதியில் உள்ள அனைத்து வியாபார நிலையங்களையும் நாளை (05) முதல் மூன்று நாட்களுக்கு மூடுமாறு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார்.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டுவரும் நிலையில் மக்களின் பாதுகாப்பு கருதி அவசர ஒன்றுகூடல் ஓட்டமாவடி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இன்று (04) மாலை நடைபெற்றது.
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் பிரதேச சபை உறுப்பினர்கள், வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டு வரும் நிலையில் மக்களின் பாதுகாப்பு கருதி வியாபார நிலையங்களில் கடையாற்றும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்வதற்கு சகலரும் ஒத்துழைப்பையும் சுகாதார தரப்பினர் எதிர்பார்க்கின்றனர்.
ஓட்டமாவடி பொதுச் சந்தையை அண்டியுள்ள மரக்கறி வியாபாரிகள் மாத்திரம் நாளை பிற்பகல் இரண்டு மணி வரை வியாபாரம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், குறித்த நேரத்தின் பின்னர் சுகாதார தரப்பினரின் அறிவுறுத்தலுக்கமைய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மரக்கறி வியாபாரிகள் சங்க பிரதிநிதிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டது.
வியாபார நிலையங்களை திறப்பதற்கு மாத்திரம் தடை விதிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் நடமாடுவதற்கு எந்தவித தடையும் விதிக்கவில்லை என்றும், மக்கள் சுகாதார விதிமுறையினை பின்பற்றி தங்களது பாதுகாப்பினை கருத்தில் கொண்டு செயற்படுமாறும், இதற்கு வியாபார உரிமையாளர்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்குமாறும் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் மேலும் தெரிவித்தார்.
குறிப்பாக ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் தனிமைப்படுத்தல் செய்யப்பட்ட நிலையில் உள்ள வீதிகள் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.