நெல் சந்தைப்படுத்தல் சபையின் வடபிராந்திய அதிகாரி லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் நேற்று (31) கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
நெல் ஆலை உரிமையாளர்களிடமிருந்து நீண்டகாலமாக லஞ்சம் பெற்று வந்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் நெல், முதலில் மாவட்டத்திலுள்ள ஆலைகளிற்கு விற்பனை செய்யப்பட வேண்டும். ஆனால் குறிப்பிட்ட அதிகாரி, அந்த விதிமுறையை மீறி தென்னிலங்கையின் பிரபல நெல் ஆலைகளிற்கு நெல் விற்பனை செய்துள்ளார்.
கிலோ ஒன்றிற்கு 3 ரூபா வீதம் லஞ்சம் பெற்று, 30,000 மெற்றிக் தொன் நெல்லை அவர் விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்படுகிறது.
இது குறித்து விவசாய அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் இந்த விடயத்தை அமைச்சர் ஒப்படைத்தார்.
இது குறித்து விசாரித்த சிஐடியினர், கொழும்பிலிருந்து சென்று நேற்று (31) மாலை கிளிநொச்சியில் வைத்து, நெல் சந்தைப்படுத்தல் சபையின் வடபிராந்திய பொது மேலாளரை கைது செய்தனர்.
பொலன்னறுவை மாவட்டத்தை சேர்ந்த 46 வயதானவரே இவ்வாறு கைதானார்.
அவர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இன்று கிளிநொச்சி நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படுவார்.