
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 11 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பெரியகல்லாறு 02ஆம் குறிச்சி, நாவலர் வீதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்தே இந்த சடலம் இன்றைய தினம் (10) மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சிறுமியின் தாயார் வெளிநாட்டிற்கு சென்றுள்ள நிலையில் குறித்த சிறுமி தனது சிறிய தாயாரின் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்னர் குறித்த சிறுமி அவரது அம்மம்மாவின் வீட்டில் இருந்தபோது தாக்கப்பட்டதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் மீட்கப்பட்டு கல்லாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
$ads={2}
இதனை தொடர்ந்து வைத்தியசாலையில் இருந்த சிறுமியை அவரது சிறிய தாயார் நேற்று அழைத்துச் சென்ற நிலையில் இன்று காலை சிறிய தாயார் வீட்டிலிருந்து சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
மரணம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


