கல்குவாரியில் வெடிமருந்து காணாமல் போன விடயத்தினையும் புத்தர் சிலையின் மீது கல் வீசப்பட்ட சம்பவத்தினையும் தொடர்புபடுத்தி இன ரீதியிலான பதட்டத்தை ஏற்படுத்துவதற்கு சிலர் முயல்கின்றனர் என சிவில் சமூக பிரதிநிதிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
முஸ்லீம் கவுன்சிலின் துணை தலைவர் ஹில்மி அகமட் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகங்கள் இவ்வாறான செய்திகளை வெளியிடும் போது மாவனெல்லையில் உள்ள சிங்கள பௌத்த சமூகத்தினர் அழுத்தங்களுக்கு உள்ளாவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது முஸ்லீம்களின் நடவடிக்கையாக இருக்கலாம் என சிங்களவர்கள் பலத்த சந்தேகம் கொண்டுள்ளனர், அதேபோன்று சிங்களவர்கள் இதற்கு எதிர் வினையாற்றக்கூடும் கலவரங்கள் வன்முறைகளில் ஈடுபடக்கூடும் என முஸ்லீம்கள் அச்சம் கொண்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கல்குவாரியில் பணியாற்றிய ஒருவரே வெடிமருந்துகள் காணாமல் போனமைக்கு காரணம் என்பதை கண்டுபிடித்துள்ள பொலிஸார் அவரை பேராதனையில் கைது செய்துள்ளனர் என ஹில்மி அகமட் குறிப்பிட்டுள்ளார்.
புத்தரின் சிலை கண்ணாடி உடைக்கப்பட்ட பகுதியில் வாழும் மக்கள் கண்ணாடியை உடைத்து அதற்குள் இருந்த பணத்தை எடுப்பதற்கு யாரோ முயன்றிருக்கலாம் என தெரிவித்துள்ளதாக ஹில்மி அகமட் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் புத்தரின் சிலை சேதமடையவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குவாரியில் வெடிபொருட்கள் காணாமல் போன விவகாரத்தை புத்தர் சிலையின் கண்ணாடி உடைக்கப்பட்டதுடன் தொடர்புபடுத்தி 2018இல் இடம்பெற்றது போன்று முஸ்லீம்களை இலக்கு வைப்பதற்கு யாரோ திட்டமிட்டு செயற்படுகின்றனர் என நாங்கள் கருதுகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
புத்தர் சிலைமீது கல்வீச்சு இடம்பெற்ற சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். விசாரணைகள் இடம்பெறுவதை உறுதி செய்த பொலிஸ் அதிகாரி மேலதிக விபரங்களை வெளியிட மறுத்தார்.
வெடிபொருட்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிஐடியினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார், அவர்களே இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டுளளனர் என பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டார்.
கடந்த 2018 டிசம்பர் 26ஆம் திகதி தீவிரவாதக் குழு ஒன்று ஹிங்குலாவில் உள்ள பல புத்தர் சிலைகளை சேதப்படுத்தினார்கள்; பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தேசிய தவ்ஹீத் ஜமாத்தும் அதன் தலைவர் சஹ்ரான் ஹாசிமும் இதற்கு உடந்தை என்பது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.