ஜனநாயகத்தையும், நாட்டையும் காப்பாற்ற ராஜபக்ஷ அரசால் அரங்கேற்றப்படும் ஊடக அடக்கு முறைகளுக்கு எதிராகக் கட்சி பேதமின்றி அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என கடந்த நல்லாட்சி அரசில் ஊடகத்துறை அமைச்சராகப் பதவி வகித்த மங்கள சமரவீரஅழைப்பு விடுத்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளன்று அவரது ஒளிப்படத்தையும், சொற்களையும் வெளியிட்டமை தொடர்பில் 'உதயன்' பத்திரிகை மீது யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் யாழ். பொலிஸாரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
$ads={2}
இது தொடர்பில் வெளியிட்டுள்ள வன்மையான கண்டனத்திலேயே முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர மேற்கண்டவாறு கூறியுள்ளார்.அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ராஜபக்ஷக்களின் ஆட்சிகளில் ஊடக அடக்குமுறைகள் வெவ்வேறு வடிவங்களில் தொடர்கின்றன. இந்த அரசின் அராஜகங்களை அம்பலப்படுத்தும் ஊடகங்கள் மீதே அடக்குமுறைகள் திட்டமிட்டுப் பிரயோகிக்கப்படுகின்றன.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் 'உதயன்' மீது தாக்குதல் வடிவில் அடக்குமுறைகள் தொடர்ந்தன.
தற்போது கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் 'உதயன்' மீது வழக்குத் தாக்கல் என்ற வடிவில் அடக்குமுறை மாற்றமடைந்துள்ளது.
உண்மைகளைச் சொல்வது தான் ஊடகங்களின் பணி; அதனால் தான் நாட்டின் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக ஊடகத்தைக் கூறுகின்றோம்.
ஊடகம் இல்லாவிட்டால் அரசியல், அரச நிர்வாகம், நீதித்துறை ஆகிய மூன்றிலும் நடக்கும் முறைகேடுகள் வெளி உலகுக்குத் தெரியாமல் போய்விடும். அதனால் நாடு சீரழிந்து விடும்.
எனவே, ஜனநாயகத்தையும்,நாட்டையும் காப்பாற்ற ராஜபக்ஷ அரசால் அரங்கேற்றப்படும் ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராகக் கட்சி பேதமின்றி அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.