இலங்கையில் சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்டதை விட, அதிகமாக பல பில்லியன் ரூபாய்களை அரசாங்கம் கடனாக பெற்றுள்ளமை ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த ஆண்டின் இறுதி நான்கு மாதங்களில் மாத்திரம் 12 ஆயிரம் கோடிகளை அரசு கடனாகப்பெற்றுள்ளதாக, இலங்கையில் பொருளாதார நெருக்கடியின் தீவிரத்தை வெளிக்காட்டும் வகையில், தலைநகரை மையமாகக் கொண்டு செயற்படும் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின் ஊடாக தெரியவந்துள்ளது.
கடந்த ஒக்டோபரில் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட கணக்கறிக்கைக்கு அமைய, ஜனவரி-ஏப்ரல் காலத்திற்காக பெற்றுக்கொள்ளக்கூடிய கடன் தொகை 721 பில்லியன் ரூபாய் மாத்திரமே எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெரைட் ரிசர்ச்சின் (Veritè Research) அறிக்கைக்கு அமைய, இலங்கை அரசு, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் 841 பில்லியன் ரூபாய் வரை கடன் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
கடன் வரம்பை மாற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு மாத்திரமே காணப்படுவதாக நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
“நாடாளுமன்றத்தை மீளக் கூட்டுவதற்கு பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்படுகின்ற நிலையில், இந்த விடயம் மிக முக்கியமானது” என வெரைட் ரிசர்ச் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், பொருளாதார நிபுணருமான, நிஷாந்த டி மெல் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
கொரோனா தொற்று நோய் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு உட்பட நாடு எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளை நாடாளுமன்றத்தின் ஊடாக மாத்திரமே, தீர்க்க முடியுமென, தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த வாரம் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு அனுப்பி வைத்த கடிதத்தில் தெரிவித்திருந்தது.
திரைசேறி பட்டியல்கள், பத்திரங்கள் மற்றும் பிணைப் பத்திரங்களை வழங்குவதன் மூலம் கடந்த நான்கு மாதங்களில் அரசாங்கம் அதிக கடனைப் பெற்றுள்ளது. அதன் பெறுமதி 742.5 பில்லியன் ரூபாய்களாகும்.
மீதமுள்ள வெளிநாட்டுக் கடன் சீனாவால் வழங்கப்பட்டுள்ளதோடு அதன் பெறுமதி 96.4 பில்லியன் ரூபாய்களாகும்.
கடனில் இருந்து தப்பிக்க அரச ஊழியர்களின் சம்பளத்தை வழங்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் கோரிக்கை விடுத்து மறுதினமே, வெரைட் ரிசர்ச் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.